
தெற்கு வியட்நாமில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பு குவாக் (Phu Quoc) தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று (11) காலை விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தகவல்களின்படி, 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 படகு ஊழியர்களும் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் காலை சுமார் 11.30 மணியளவில் படகு கவிழ்ந்துள்ளது. விபத்திற்குப் பின்னர் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் சுமார் 20 தமிழர்கள் பயணித்ததாகவும், அவர்களில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியட்நாமின் ஆன் தோய் கடற்பகுதியில் உள்ள ஹான் மே ருட் ங்வோய் தீவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு விபத்தில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களை உடனடியாக சேகரித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வர இந்தியத் தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இறுதியாக, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.




