
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (G.C.E.) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 225,748 மாணவர்கள் உயர்தர (A/L) கல்வியைத் தொடர்வதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இம்முறை பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் இம்முறை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, விஞ்ஞானப் பாடத்தில் இம்முறை 70.1 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு அந்த வீதம் 69.07 சதவீதமாக இருந்தது.
மேலும், கணிதப் பாடத்தில் இம்முறை 72.03 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த ஆண்டு அது 71.06 சதவீதமாக பதிவாகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டின் பெறுபேறுகள் மாணவர்களின் கல்விசார் திறனில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக கல்வித் துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் சித்தி வீதம் அதிகரித்துள்ளமை கல்வித் தரம் மேம்பட்டு வருவதை எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.




