இந்தியா

விஜய் பக்கம் சாய்ந்த கட்சிகள்; புதிய அரசு அமைவது உறுதி

Desktop Image Mobile Image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது உத்தியோகபூர்வ ஆதரவை வழங்கியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது.

ஏற்கனவே 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கியிருந்த நிலையில், மேலதிக ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரியிருந்தார்.

இதனடிப்படையில், இன்று சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி  கட்சிகளின் மாநிலக் குழுக் கூட்டங்களின் முடிவில் இந்த ஆதரவுத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

 

2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) முதலில் தனது ஆதரவை அறிவித்த நிலையில், தற்போது 2 உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI-M) விஜய்க்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது ஆதரவை அறிவித்துள்ளது.

 

 

இந்த நிலையில் 119 தொகுதிகளை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தமிழ் நாட்டில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று முன்தினம் மாலை தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் அழைக்கவில்லை.

 

 

 

தொடர்ந்து நேற்றும் ஆளுநரை விஜய் சந்தித்திருந்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு எண்ணுடன் தன்னை வந்து சந்திக்குமாறு ஆளுநர் கூறியிருந்தார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளார்.

பெரும்பான்மை எண்ணுடன் தன்னை சந்திக்குமாறு கவர்னர் கூறியிருந்த நிலையில்,  இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே நாளைய தினம் பெரும்பாலும் ஜோசப் விஜய் எனும் நான்..! என்ற வரலாற்று நிகழ்வு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button