முல்லைத்தீவில் போதைப்பொருளுக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு பேரணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று (23) இடம்பெற்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் ஆரம்பமான பேரணி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.
“உங்கள் எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப்பொருளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த பேரணியில், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தப்பட்டிருந்தன.
“வேண்டாம் வேண்டாம் உயிர்க்கொல்லி போதை வேண்டாம்”, “போதையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்”, “எதிர்ப்போம் எதிர்ப்போம் போதைப்பொருளை எதிர்ப்போம்” போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஐயாத்துரை தவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள், ஜெய்க்கா நிறுவன பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




