
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, இலங்கையின் பல பகுதிகளில் இன்று (15) மேகமூட்டமான வானிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி காலை 8.30 மணி முதல் 15ஆம் திகதி அதிகாலை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல, வஸ்லதாலாராம பகுதியில் 146.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது அந்தக் காலப்பகுதியில் நாட்டில் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சியாகும்.
கடற்பரப்புகளிலும் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்தோ அல்லது குறிப்பிட்ட திசையின்றியோ மணித்தியாலத்துக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதனால் குறித்த கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




