யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மெட்ரோ பேருந்து சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை இம்மாதத்திற்குள் 122 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 50 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மெட்ரோ Bus Service 172 பேருந்துகள் வரை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேருந்து சேவையை நடத்துவதற்கு தனியார் துறைக்கும் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
நகர போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் மெட்ரோ பேருந்து சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மெட்ரோ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது டிப்போ முனையம் கடந்த 04ஆம் திகதி பத்தரமுல்லை தலங்கம பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட நிலையில், கடவத்தை டிப்போ முனையத்தின் செயற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ பேருந்து சேவையின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை வலுப்படுத்துவதற்காக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு நான்கு புதிய டிப்போக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மெட்ரோ பேருந்து சேவையின் 01ஆம் இலக்க வழித்தடத்தில் மாகும்புரவிலிருந்து மகரகம ஊடாக கடவத்தை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் 15 புதிய மெட்ரோ பேருந்துகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறை, டிப்போ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட A/C பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கும், சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.




