யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம்

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு பகுதியில் உள்ள ஐயனார் ஆலயக் காணியில் அமைந்துள்ள கிணறு ஒன்று வழக்கத்திற்கு மாறாக திடீரென பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கிணற்றில் நீர்மட்டம் நில மட்டத்திற்கு மேலாக உயர்ந்துள்ளதுடன், தண்ணீர் கிணற்றிலிருந்து வெளியேறிய வண்ணம் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் கிணற்றை அண்டியுள்ள மேலும் சில கிணறுகளிலும் வழமைக்கு மாறாக நீர்மட்டம் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு கிணற்றில் நீர் நில மட்டத்தை எட்டியுள்ளதுடன், மேலும் இரண்டு கிணறுகளில் வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் காணப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, குறித்த பகுதியில் இந்த காலப்பகுதியில் கிணறுகளில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுவது வழக்கம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் குடிநீருக்குக் கூட போதுமான தண்ணீர் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், திடீரென கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தண்ணீர் வெளியேறி வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சில கிணறுகளில் காணப்படும் தண்ணீர் நன்னீராக மாறியுள்ளதாகவும், ஒரு கிணற்றில் உள்ள நீர் வழக்கத்தை விட மிதமான சூட்டுடன் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாற்றத்தை ஐயனார் ஆலயத்துடன் தொடர்புடைய ஒரு புதுமையாக தாங்கள் கருதுவதாகவும், தமது கிராமத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.



