நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள் – 500-ஐ நெருங்கும் உயிரிழப்பு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்கப்படும் உடல்களை சேமித்து வைப்பதற்கு சவக்கிடங்குகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை தற்காலிகமாக பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பல்வேறு இடங்களில் உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, காணாமல்போன சுமார் 1,500 பேரை தேடும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், அவற்றை அடையாளம் காணும் பணிகளும் அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருவெள்ளத்தின் தாக்கத்தினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், காணாமல்போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




