நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் பின்னணியில், சிறுவன் ஒருவர் தனது கைக்குழந்தையான தங்கையை முதுகில் சுமந்துகொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி நடந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
வெள்ளப் பேரழிவின் போது பெற்றோரிடமிருந்து பிரிந்ததாக கூறப்படும் இந்த குழந்தைகள், தங்களது குடும்பத்தினரைத் தேடி அலைந்து வருவதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள காணொளி தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவனின் முதுகில் கைக்குழந்தை இருப்பதும், இருவரின் முகங்களிலும் வெள்ளத்தால் ஏற்பட்ட காயங்கள் காணப்படுவதும் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சிறுவன் தனது தங்கையை பாதுகாக்கும் விதமாக சுமந்து செல்லும் காட்சி பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது.
இந்த காட்சியை பார்த்த சமூக ஊடக பயனர்கள், இது Grave of the Fireflies என்ற ஜப்பானிய அனிமேஷன் திரைப்படத்தில் காணப்படும் சகோதரர் மற்றும் சகோதரியின் வாழ்க்கைச் சூழலை நினைவுபடுத்துவதாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,250 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறைச் சரிவுக்குப் பின்னர், கடந்த மாதம் 26ஆம் திகதி லெண்டே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பின்னர் போடே கோஷி ஆற்றிலும் பெருக்கெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசித்த மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், வாகனங்கள், பாலங்கள் மற்றும் வீதிகளும் அழிவடைந்துள்ளன.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் உள்ள நீர்மின் நிலையங்களும் இந்த இயற்கை அனர்த்தத்தின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




