வறட்சி அபாயம் அதிகரிப்பு; எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தயாராகுமாறு அறிவுரை

உலகளாவிய ரீதியில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எல் நினோ நிகழ்வு இம்முறை தீவிரமடையக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்ள அரசாங்கமும் பொதுமக்களும் தயாராக இருக்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் எல் நினோ ஆரம்பித்துள்ளதாகவும், தற்போது அதன் தாக்கம் குறைவாக இருந்தாலும் அடுத்த சில மாதங்களில் அது வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாட்டின் பல பகுதிகளில் வறட்சியான காலநிலை நீடித்து வருவதால், நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன், பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையை ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், வறட்சி நீடிக்கும் வரை பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.




