பங்களாதேசத்தில் கனமழை பேரழிவு – வெள்ளம், மண்சரிவில் 51 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சிட்டகாங்க் (Chattogram) மாகாணத்திற்குட்பட்ட 7 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பதிவாகி வருவதால், பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
பங்களாதேச வானிலை ஆய்வு நிலையம், எதிர்வரும் நாட்களிலும் கனமழை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசின் தகவலின்படி, நாட்டின் 64 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரிடரால் சுமார் 10 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) மாவட்டத்தில் அதிகபட்சமாக 28 பேர், சட்டோகிராம் பகுதியில் 13 பேர், பந்தர்பன் மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலர் காக்ஸ் பஜார் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த ரோகிங்கியா அகதிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் அவசர நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.



