
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாகப் பேசப்பட்டு வரும் ‘ஜனநாயகன்‘ திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.
முதலில் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில காட்சிகள் நீக்கப்பட்டதுடன், சில வசனங்கள் மியூட் செய்யப்பட்ட நிலையில், திரைப்படத்திற்கு ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24 ஆம் திகதி வெளியாகும் என, ஐக்கிய இராச்சியத்தில் (UK) திரைப்படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன், முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும், ரசிகர்களிடையே திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, வெளியாகும் நாளை முன்னிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.



